சனி, 14 ஜனவரி, 2012

சூழலை மாசுபடுத்தும் புகை கக்கி வாகனங்கள்

நேரடி ரிப்போர்ட்


யாழ்குடாநாட்டில் வாகனங்களின் பெருக்கம் அபரிதமான முறையில் பெருகிவருகின்றது. சுவட்டு எரிபொருட்களை மூலமாகக் கொண்டியங்கும் இவ்வாகனங்கள் சூழலுக்கு நட்பானவையல்ல.இவை சூழலில் பல பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன. யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரையில் இன்று வாகனங்களின் பெருக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகிறது. இவ்வாறு பெருகிவரும் வாகனங்களில் பெரும்பாலானவை தரமற்ற பழைய இயந்திரங்களைக் கொண்டியங்குபவையாகவே உள்ளன. இதன்காரணமாக இவை அதிகமாகக் கக்கும் நச்சுப்புகைகளை சுவாசிக்க முடியாது மக்கள் அவஸ்தைப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
 
யாழ்குடாநாட்டை அச்சுறுத்திவரும் இவ்வாகனங்கள் பற்றியும் அவற்றால் வெளிவிடப்படும் நச்சுப்புகைகளால் மனிதனுக்கும் சூழலுக்கும் ஏற்படும் விளைவுகள் பற்றி சூழலியலாளரான பொ.ஐங்கரநேசனிடம் வினவியபோது,
 
புகைகக்கும் வாகனங்கள் பற்றிக் கருத்துக்கூறிய அவர் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த வருடத்தைக்காட்டிலும் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதிக் கணிப்பின்படி வாகனங்களின் பெருக்கம் சுமார் 70 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறினார். இத்தகைய வாகனங்களின் பெருக்கம் காரணமாக யாழ்.குடாநாட்டு மக்கள் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகள் விபத்துக்களைச் சந்தித்துவருவதுடன் இவற்றில் கணிசமான அளவு வாகனங்கள் பாவனைக்குத் தரம் அற்றவையாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். நீண்டதூரப் போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் நிலை கடந்து இன்று குறுந்தூரப் பாவனைக்குக் கூட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தும் போக்கு எம்மவரை ஆட்கொண்டுள்ளதால் துவிச்சக்கரவண்டிப் பாவனை அருகி வருவதாகவும் இன்று யாழ்ப்பாண மக்கள் தமது சமூகஅந்தஸ்தை உயர்த்திக் காட்டும் ஓர் சாதனமாக மோட்டார் சைக்கிளைக் கருதுவதால் மோட்டார் சைக்கிள் இல்லாத தனிநபரே இல்லை எனும் அளவில் மோட்டார் சைக்கிள் பாவனை குடாநாட்டு மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ளது என்றார்.
 
இத்தகைய மோட்டார் வாகனங்கள் சுவட்டு எரிபொருளை எரித்து இயங்கும் திறன் வாய்ந்தவை ஆகையால் இவை வெளிவிடும் புகைகள் காபன்மொனொக்சைட்(Carbanmonoxide Co2), நைதரசனொட்சைட்(No2), சல்பர்டைஒக்சைட்(So2),Benzene,Formaldehide, போன்ற நச்சுவாயுக்களுடன் உலோகத்துகள்களையும் ஈயத்துணிக்கைகளையும் வளியில் சேர்க்கின்றன. இத்தகைய கட்புலனாகாத இரசாயனச் சேர்வைகள் சூழலுக்கும் மனிதனுக்கும் பெரும் கேடுவிளைவிக்கக் கூடியன. இதில் காபனோர் ஒக்சைட்டானது ஈமோகுளோபினுடன் மிக நாட்டமாகப் பிணைப்படையக் கூடியதாகும். இதனால் காபொட்சி ஈமோகுளோபின் உருவாகிறது. இதன் விளைவாக ஈமோகுளோபினால் ஒட்சிசனைக(O2) காவிச்செல்லும் திறன் குறைவடைகிறது. அது மட்டுமன்றி இவ்வாகனப்புகையுடன் வெளியேறும் ஈயமானது மனித உடலிலுள்ள செங்குருதிக் கலங்களைப் பாதித்து குருதிச்சோகையை ஏற்படுத்தும் திறன் வாய்ந்தது. Benzene என்பு மச்சையைப் பாதிக்க வல்லது என்றார்.
 
மேலும் சூழல் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் வளர்ச்சியடைந்த நாடுகள் தனிநபர் மோட்டார் வாகனப் பாவனைகளைக் குறைத்து பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து வருவதாகவும் தரமான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தவே அனுமதிக்கும் அந்நாடுகளில் ஒவ்வொருவாகனமும் Vehicle Emission Test எனப்படும் புகை வெளிவிடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரச்சான்றிதழ் பெற்ற பின்னரே போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றன. எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இத்தகைய பரிசோதனைகள் இடம்பெறாமையே இவ்வாறு தரக்குறைவான வாகனங்கள் போக்குவரத்துக்களில் ஈடுபடக் காரணம் என்றார்.
 
வளிமண்டலத்திலுள்ள இயற்கை வாயுக்களின் வீதத்தை மாற்றும் வாகனங்களின் இச் செயற்பாடு நமது சற்றுப்புறச் சூழலில் பாரிய சவாச நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது. வுhகனங்களின் பாவனைத்தரத்தினைக் கருத்தில் கொள்ளாது வெறுமனே வருமானத்தை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படும் வாகனச் சாரதிகள் புகைகக்கும் வாகனங்களைச் செலுத்துவதைக் அவதானிக்கமுடிகிறது. யாழ் நகரப்பகுதியில் (JaffnaMetro Politant Region) புகைகக்கும் வாகனங்களின் பெருக்கத்தினால் அப்பிராந்தியம் விரைவான சூழல் மாசடைதலுக்குட்பட்டு வருகின்றது. இதனால் அப்பிராந்தியத்தை அண்டி வாழும் மக்கள் பல்வேறு சுவாசநோய்களுக்கும் இருதய நோய்களுக்கும் ஆட்படும் வீதம் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் இவ்வாகனங்கள் கக்கும் புகைகள் மனித உடலுக்கு விளைவிக்கும் கேடுகள் பற்றி வைத்திய கலாநிதி லக்ஸ்மனைச் சந்தித்துக் கேட்டபோது,
வாகனங்களால் வெளிவிடப்படும் புகையில் கலந்துள்ள நச்சுவாயுக்களானது நமது சுற்றுப்புறச்சூழலுக்கு குந்தகம் விளைவிப்பதோடு மனித உடலின் முக்கிய உடலுறுப்பான நுரையீரலை நேரடியாகத் தாக்குகின்றன. இவ்வாறு நுரையீரல் தாக்கத்துக்குள்ளாவதால் இது நீண்டகாலத்தில் சுவாசப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது எனக் கூறினார். அது மட்டுமன்றி நகர மயமாக்கலுக்கு உட்படும் பிரதேசங்களிலும் குறிப்பாக கட்டட நெருக்கடி கூடிய யாழ்.நகரப்பகுதியிலும் இவ் வாகனங்கள் வெளிவிடும் நச்சுப்புகைகளின் தாக்கம் அதிகமாக உணரப்படுவதாகவும் ஆரம்ப காலத்தில் பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்த ஆஸ்துமா நோய் தற்போது மனித வாழ்வில் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்படுவதற்கும் இவ்வாகனப் புகைகள் வளியில் கொண்டு சேர்க்கும் தூசி துணிக்கைகளே காரணம் எனத் தெரிவித்தார். பாவனைத்தரம் உறுதிப்படுத்தப்படாத பழைய இயந்திரங்களைக் கொண்டியங்கும் வாகனங்களால் சூழலில் விடப்படும் புகைகள் மனித சுவாசத்துக்குரிய தூய வளியின் செறிவைக்குறைத்து வருவதாகக் கூறினார்.
 
சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியது எமது கடமையாகும். எனவே பாவனைத் தரம் அற்ற பழைய வாகனங்களின் பாவனையைப் புறமொதுக்கி சூழலை அதிகளவு மாசுபடுத்தாத பாவனைத்தரம் உறுதிப்படுத்தப்பட்ட இயந்திரங்களைக் கொண்டியங்கும் வாகனங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்த யாழ் குடாநாட்டு மக்கள் அனைவரும் முன்வரவேண்டும். அவ்வாறின்றி சூழலுக்குப் பங்கம் விளைவிக்கும் தரமற்ற வாகனங்களைப் போக்குவரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவேண்டும். இனிவருங் காலங்களில் யாழ் குடாநாட்டிலும் வாகனங்களைப் புகைவெளிவிடும் பரிசோதனைக்கு(Vehicle Emission Test) உட்படுத்தி தரச் சான்றிதழ் வழங்க  அது சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என்பதே யாழ்.குடாநாட்டு மக்களின் பெருவிருப்பமாகும்.

                                                                                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக