ஞாயிறு, 6 மே, 2012

கற்கால வாழ்வை நோக்கிய யாழ்.குடாநாட்டு மக்களின் பயணம்...

கற்காலத்தில் மனித ஜனனங்கள் அதிகம் நிகழ்ந்தபோது கலாசாரம் கானல் நீராக இருந்தது. மனிதர்கள் விலங்கினத்தின் சாயலையும் தன்மைகளையும் ஏற்றிருந்தனர். ஆண் - பெண் என்ற உறவுப் பங்கீடுகள் பிணைப்புகள் அனுமதியின்றி கட்;டற்று நிகழ்ந்தன. விலங்கினங்கள்; சந்ததி விருத்திக்காகவும் கட்டவிழும் பாலியல் கிளர்ச்சிகளுக்காகவும் எதிர்பாலினத்தை நாடின. இத்தன்மை பொருந்தியவர்களாகவே அக்கால மனிதர்கள் விளங்கினார்கள். தற்போது எமது ஊர் வழக்கில் பொதுவாக பிரயோகிக்கப்பட்டுவரும் 'கள்ளக்காதல்' என்ற சொற்பதம் அக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட உறவாக காணப்பட்டது. வயதுக்கு வந்த ஆணும் சரி பெண்ணும் சரி அக்கண நேரத்தில் தோன்றி மறையும் பாலியல் உணர்வுகளை வடிகட்ட எதிர்பாலினத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது. அக்காலத்திலிருந்த உறவுகள் உடலை மையப்படுத்தியதாக இருந்தனவே தவிர உள்ளத்தை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.
 

காலங்கள் செல்லச் செல்ல மனித இனக்குழுமங்களிடையே வர்க்கப்பாகுபாடுகள் முளைவிட்டன. தமக்கென்ற ஒரு  நிலப்பகுதியை வரையறுத்து சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து தமக்கிடையில் ஒரு தனித்தன்மையைத் உருவாக்கத் தலைப்பட்டனர். இதன் விளைவாக சாதி, இனம், மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றைத் தனித்துவ அடையாளங்களாகக் கொண்டு தனித்தனிக் கூட்டப் பிரிவினர் தோற்றம் பெற்றனர். இத் தனித்துவக் கூறுகள் ஏனைய குழுமங்களிடமிருந்து தனித்துவப்படுத்திக் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டன. ஒரு இனக் குழுமத்திற்குள் அவ்வினத்திற்கே உரிய மொழி, பண்பாட்டு விழுமியங்கள், கலைகள் என்பனகருக் கொண்டதன் காரணத்தினால் சிற்சில நன்மைகள் இருந்தாலும் இன முரண்பாடுகள், சாதியப் பிரச்சினைகள் என நீண்டு இறுதியில் உட்பகை வலுத்து இனப்போராக, அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான யுத்தமாக வெடித்தது.
 

இதனால் ஓர் இனம் இன்னோர் இனம் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டது. சனத்தொகையில் கூடிய பங்கினைக் கொண்ட இனம் பெரும்பான்மை – அதிகார வர்க்கமுள்ள இனமாகவும் இதற்கு மாறாக சனத்தொகையில் சிறிய தொகையைக் கொண்ட இனம் சிறுபான்மையினமாகத் தோற்றம் பெற்றது.
அதிகாரத்தில் வலுக்கூடிய நிலையிலுள்ள இனம் வலிமை குறைந்த இனத்தை ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து அவ்வினத்தை அடக்கியாள முற்படுகிறது. இதற்கு யுத்தம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகின்றது. படை வலிமையில் கூடிய நிலையிலுள்ள இனம், குறைந்த வலிமையிலுள்ள இனத்தை தனது அதிகார பலத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி எதேச்சாதிகாரப் போக்கின் மூலம் அவ்வினத்தின் கட்டுமானத்தை உடைத்தெறிய முற்படுகின்றது. இதுவரை சிறுபான்மை இனக் குழுமத்தின் அடையாளங்களாக இருந்து வந்த மொழி, கலை, கலாச்சார கூறுகளை சிதைக்கவோ அழிக்கவோ முற்படுகின்றது.அல்லது தனது இனக் கலாசாரத்தை பிற இனத்தின் மீது திணிக்க முற்படுகின்றது. அச்சிறுபான்மை இனத்தின் அதிகாரப் பிரிவினரின் ஆட்சி ஒழுங்குகளால் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு வந்த இனஅடையாளங்கள் அவ் அதிகாரப் பிரிவினரின் செயற்திறனை உடைத்தெறிந்தவுடன் அச்சிறுபான்மை மக்களின் வாழ்வியல் முறைகளிலும் மாற்றங்கள் தென்பட்டன. இதுவரைகாலமும் இறுக்கத்துடன் கடைப்பிடித்த உயர் பண்பாட்டு விழுமியங்களை புறமொதுக்கி அன்னிய கலாசார வலையில் விழுந்து மனம்போன போக்கில் வாழத்தலைப்பட்டனர். இதனால் கற்கால மனிதரின் குணாம்சங்களையும் பண்புகளையும் தெரிந்தோ தெரியாமலோ வரவழைத்துக் கொள்கின்றனர். இதனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் குணவியல்புகள் இக்கால மக்களிடையே பதிவு பெற்று வருகின்றன.
 

தற்போதுள்ள சூழலில் கள்ளக் காதல்கள் முளைவிட்டுக்கொள்கின்றன.ஓருவனுக்கு ஒருத்தி என்ற இறுக்கமான பண்பாடுகளுடன் சிறப்புப் பெற்றிருந்த இனம் அதன் தனி இயல்புகளிலிருந்து விலகி மிருகத்தனமான செயல்களில் ஈடுபட முனைப்புக்காட்டுகிறது. கல்வி கற்று அறிவு ரீதியில் முதிர்ச்சியடைந்து விருத்தியடைந்தவர்கள் கூட அந்த விடயத்தில் மிருக உணர்வுடையவர்களாகவே இருக்கின்றனர்.
எத்தனையோ மன முறிவுகள் மண முறிவுகளுக்கு வழிவகுத்து வருகின்றன. கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுமுறை மேற்கத்தேய கலாசார உள்வாங்கலால் சிதைந்து போயிருக்கிறது. இத்தகைய மண முறிவுகளுக்கு பெரும்பாலும் 'கள்ளக்காதல்' எனும் கீழ்த்தரமான உறவுநிலை பிரதான காரணியாக விளங்குகின்றது. இந்த உறவுநிலை பதியப்படாத உறவுநிலையாக நீள்கிறது. இவ்வுறவு சமூகக் கட்டுமானங்களை உடைத்தெறியச் செய்துள்ளது. பல குடும்பப்பிரிவினைகளுக்கு வழிவகுத்துள்ளது. இன்று நீதிமன்றங்கள் தாபரிப்பு வழக்குகளால் நிரம்பி வழிகின்றன. 


கருத்தொருமித்த புரிந்துணர்வு கணவன்-மனைவிக்கிடையில் நிகழத் தவறியமையால் புனிதமான குடும்ப உறவுநிலையில் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வுறவுப் பிரிவினையால் பெரிதும் பாதிப்படைவது அவர்களது பிள்ளைகள்தான். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சூனியப்படுத்துவதற்கான சதுரங்க விளையாட்டில் இன்று பல கணவன்-மனைவிமார் இறங்கியுள்ளனர். இப்பலப் பரீட்சையால் சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.கணவன்-மனைவி உறவென்பது தனித்துவமானது. அன்னியோன்னியமானது. மரணபரியந்தம் வரை தொடரும் தன்மையுடையது. இப்புனித உறவுக்கு களங்கம் விளைவிக்கும் பல சம்பவங்கள் எமது சமூகத்தில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு படித்த மேற்தட்டு மக்களே அதிகம் பலியாகிவருவது துரதிஷ;டவசமானது. இன்றைய திருமண உறவுநிலை உடலை ,அந்தஸ்தை,  பணபலத்தைப் பார்த்தே தீர்மானிக்கப்படுகிறது. இதனால் மனித மனங்கள் ஒன்றிணையத் தவறிவிடுகின்றன.
முன்னர் இருந்த வாழ்க்கை முறை வேறு.இப்போது இருக்கும் வாழ்க்கை முறை வேறு. முன்னர் மூத்தோருக்கு மதிப்பளித்து அவர்தம் சொற்படி நடந்த கீழ்ப்படிவுள்ள சமூகம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே இடம்பெறும் பிணக்குகள் மூடுமந்திரமாகத் தீர்க்கப்பட்டன. மூத்தோரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பண்பு அன்று மேலோங்கியிருந்தமையால் மணமுறிவு தடுக்கப்பட்டது. தவிர்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. மூத்தோருக்கு மதிப்புக்கொடுக்கும் பண்புகள் அருகிவருவதனால் நிலைமை விபரீதமாகவே உள்ளது. இதனால் தாபரிப்பு வழக்குகளும் வகை தொகையின்றி நீண்டு செல்கின்றன. தீர்ப்பு வழங்கும் கால எல்லைகளும் நீள்கின்றன. இதனால் தேவையற்ற சிக்கல்களும் அதிகளவு பணமும் வீண் விரயமாகின்றன. சட்டம் படித்தவர்கள் தம் பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றனர்.
 

போர்க்காலச் சிந்தனையில் மூழ்கிப்போயிருந்த மக்களின் சிந்தனைகள் ஒருமை நிலைப்பட்டதாக இருந்தன. போரையும் அது எமக்களித்த அவல வாழ்வையும் பற்றிய சிந்தனைகள் மேலோங்கியிருந்த காலம் அக்காலம். அப்போதிருந்த ஆட்சிக்கட்டமைப்பு மக்களின் கட்டற்ற சுதந்திரத்துக்கு வேலி போட்டது. ஆண்-பெண் என்ற சமவலுநிலை பேண்தகு நிலையில் இயக்கப்பட்டது. சட்டம் என்ற இரும்பு வேலியை உடைக்க முற்பட்டவர்கள் உடைபட்டே போன வரலாறுகள் ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாய் இருந்தன. ஆனால் இன்று போரின் திரை விலக்கப்பட்டு கலாசார விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டங்கள் உறங்கு நிலையில் இருக்கின்றன.
 

நடைபெற்று முடிந்த யுத்தம் ஏராளமான கைம்பெண்களையும் இளம் விதவைகளையும் எச்சங்களாக விட்டுச்சென்றுள்ளது. இவர்களின் எதிர்கால வாழ்வு சூனியமாக்கப்பட்டுள்ளது. அவர்களது பிள்ளைகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ஏங்கியபடி நிற்கின்றனர். இளம் விதவைப் பெண்களின் வாழ்வுக்கு உரமூட்டவும் அவர்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கும் ஒளியூட்டவேண்டியுள்ள நிலையில் இவ்வாறு கணவன்-மனைவி உறவில் ஏற்படும் விரிசல் நிலைகளால் ஏராளமான குடும்பங்கள் பிரிகின்றன. இதனால் குடும்பம் ஒரு கதம்பம் என்ற முறையில் வாழ்ந்து வந்த மக்கள் சமூகம் குடும்பக்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலை சமூக இயங்கு தளத்திலும் தாக்கம் செலுத்துகிறது.


இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற முதுமொழிக்கு இணங்க அவர்களை வளமான வாழ்வுக்கு இட்டுச் செல்லவேண்டிய தமது பொறுப்புணர்ந்து இளவயதினர்களிடையே சரியானபுரிதல்கள், தன்னிலையுணர்தல், கல்வியறிவுநிலை என்பவற்றுக்கு பெற்றோர்கள் சரியான அடித்தளமிடவேண்டும். சிறந்த அத்திவாரம் அமைந்தால்தான் கட்டடம் பலமாக சிறப்புற்றிருக்கும். இல்லையேல் சிலகாலங்களின் பின் அக் கட்டடம் உடைந்துவிழக்கூடிய அபாயங்களும் காணப்படும். அதேபோலத்தான் எமது வாழ்க்கைகளும். ஆகையால் பெற்றோர்கள் தமக்கிடையே சரியான புரிந்துணர்வுகளுடன் அன்னியோன்னியமாக ஒத்திசைவுடன் வாழப்பழகினால் அவர்களது பிள்ளைகளின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் பிரகாசமானதாக இருக்கும். இல்லையேல் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வு கேள்விக்குரியதாகிவிடும். எனவே இவ்விடயத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டு செயற்பட முன்வரவேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக