வெள்ளி, 2 மார்ச், 2012

எரிபொருள் விலையேற்றமும் எதிர்ப்பு அரசியலும்

எரிபொருள் மீதான அரசின் விலை அதிகரிப்பானது நாட்டு மக்கள் மத்தியில் பாரிய பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. இம்மாதம் 11ம் திகதி முதல் பெற்றோலின் விலை லீற்றருக்கு 12  ரூபாவினாலும் டீசலின் விலை 31 ரூபாவினாலும் மண்ணெண்ணெயின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டதையடுத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து பணிப்பகிஷ;கரிப்பில் இறங்கினர். கொழும்பிலும் யாழ். குடாநாடு முழுவதும் இடம்பெற்ற இப்பணிப் பகிஷ;கரிப்பின் காரணமாக சீரான போக்குவரத்து நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன. 

பாடசாலை செல்லும் மாணவர்களும் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நோயாளர்களும் வேலைத்தளங்களுக்குச் செல்வோரும் பயணத்தை மேற்கொள்ள முடியாது பெரும் அவதிக்குள்ளாகினர்.  






மக்கள் பெரும்திரளாக அரச பேரூந்துகளின் வருகையை எதிர்பார்த்து வீதிகளிலும் பஸ்தரிப்பிடங்களிலும் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர். அன்று முழுவதும் தொடர்ந்த பகிஷகரிப்பு கட்டணங்களை அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து கைவிடப்பட்டது. எனினும் பஸ்கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பானது பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் ஊழியர்கள் எனப் பல்வேறு  தரப்பினரின் போக்குவரத்திலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.
 
அரசின் இந்த எரிபொருள் மீதான விலை அதிகரிப்பானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் உழைக்கும் வர்க்கத்தினர் மீனவர்கள்;, விவசாயிகள் உற்பத்தியாளர்கள், முச்சக்கரவண்டிடியாளர்கள், தனியார் பேரூந்து மற்றும் லொறி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியள்ளது.
 
யுத்தம் முடிவடைந்த நிலையில் ஏ-9 பாதை திறக்கப்பட்டுள்ளமையால் இன்று தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள், லொறிகள் என்பன தவணைக்கட்டண அடிப்படையில் கொள்வனவு (லீசிங்) செய்யப்பட்டவையேயாகும்.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக போக்குவரத்துக்கட்டணங்களை அதிகரித்ததால் பயணிகளின் வரவு  குறைவடைந்து தமது வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கவலையடைகின்றனர்.
 
எரிபொருளின் அதிகரிப்பால் மின்சாரக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதியுள்ளவர்களுக்கு இம் மின் கட்டண அதிகரிப்பு பெரும் சுமையாக இருக்க யாழ்.குடாநாட்டில் தீவகம், வலிகாமம் பகுதியிலும் வடமராட்சியில் பல பகுதிகளிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களிலும் வன்னி பெருநிலப் பரப்பின் பல பகுதிகளிலும் மின்சார வசதி அற்ற நிலையே காணப்படுகிறது. குப்பி விளக்குகளை நம்பி வாழும் இப்பிரதேச மக்களுக்கு மண்ணெண்ணெய் விலையில் ஏற்படுத்தப்பட்ட 35 ரூபா அதிகரிப்பானது பெரும் செலவீனமாக மாறியுள்ளது.
மீள்குடியேறியிருக்கும் மாணவர்களுக்கு எஞ்சியிருப்பது அவர்களது கல்வி மட்டுமேயாகும். மண்ணெண்ணெய் மீதான அரசின் விலை அதிகரிப்பானது வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வேட்டு வைப்பதாகவே அமைந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் குப்பிவிளக்கு வெளிச்சத்தில்கூட தமது படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு வன்னி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
எரிபொருள்கள் விலை அதிகரிப்பால் மீனவர்களும் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளனர். சாதாரணமாக மீன்பிடிப்படகொன்றுக்கு 70 முதல் 80 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் மண்ணெண்ணெயின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாளொன்றுக்கு கடல்ப்போக்குவரத்துக்கு சுமார் 5 ஆயிரம் ரூபா மேலதிகமாகத் தேவைப்படுவதாகவும் நீண்டகால மீன்பிடிப்படகொன்றுக்கு மேலதிகமாக ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபா செலவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அதைஈடுசெய்ய மீன்விலையை அதிகரிப்பினும் மக்கள் கொள்வனவு செய்யத் தயங்குவார்கள் எனவும் வருத்தத்துடன் கூறிவருகின்றனர். 

இதேவேளை எரிபொருள்கள் மீதான விலை அதிகரிப்பை அடுத்து யாழ்.குடாநாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் பால்மா வகைகள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை போக்குவரத்து செலவீனங்களைக் காரணம் காட்டி உயர்த்திவரும் வர்த்தகர்கள் ஏற்கனவே களஞ்சியப்படுத்தியிருந்த பொருட்களின் விலைகளையும் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே 'ஆனை விலை! குதிரை விலை! என அதிகரித்துச் செல்லும் விலைவாசிச் சுமையை தாங்க முடியாமல் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.                            

அனைத்துப் பொருட்கள் மீதான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசை எதிர்த்துப்போராட நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதங்களை விடுத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முனைப்போடு வீதியில் இறங்கிப்போராடத் தொடங்கியுள்ளனர். தன்னிச்சையாக விலைகளை அதிகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானியம் வழங்க முன்வருவதாக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றும் அரசை நம்பாமல் மக்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த எதிர்ப்புப் போராட்டம் அரசுக்கு பெரும் தலையிடியாகவே உருவெடுத்துள்ளது. மக்களுடைய எதிர்ப்பையும் போராட்டங்களையும் முடக்க அரசு தமக்கு எதிராகப் போராடும் மக்களை ஆயுத முனையில் அடக்கி ஒடுக்க முயன்று வருகிறது. 

இவ்வாறு பொதுமக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் அரசு சிலாபத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அப்பாவி மீனவர் ஒருவரின் சாவுக்கும் காரணமாகியது. யுத்த காலத்தில் அப்பாவி மக்களை ஆயுதமுனையில் மிரட்டிய அரசு  யுத்தம் முடிவுற்ற பின்னரும் தனது காட்டு மிராண்டித்தனத்தைக் கைவிடவேயில்லை. சிவில் நிர்வாகம் எனக் கூறிக்கொண்டு ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தவே முயல்கின்றது என்பதையே அரசின் இச் செயல் வெளிக்காட்டி நிற்கின்றது.