சனி, 14 ஜனவரி, 2012

மாற்றமுறும் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்படுமா...?

நவநாகரீக மோகத்தில் கட்டுண்டு கிடக்கும் இன்றைய இளம் சமுதாயத்தை மீட்சி பெற செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும் எமது கடமையாகும்.
பன்நெடுங்காலமாக போற்றி வளர்க்கப்பட்டு வந்த தமிழர் தம் பண்பாட்டு விழுமியங்கள் இன்று தேக்க நிலையை அடைந்து அடிச்சுவடுகளே தெரியாத அளவிற்கு மங்கி மறைந்து வருகின்றது. இந்நிலை சமூகப்பற்றுள்ளவர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்துகின்றது. கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தின் பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது எம்மனதில் ஓர் பூரிப்பு ஆனால் இன்று நாம் எம் பண்பாட்டு விழுமியங்களை ஓரளவிற்கேனும் பிரதிபலிக்கின்றோமா? என்று எண்ணுகையில் எம்நெஞ்சம் கனக்கிறது.

இன்று எமது சமூகம் ஓர் கந்தறுந்த சமூகமாக மாற்றமடைவதற்கு காரணமானவர்கள் யாவர்? அதன் பிண்ணனிச் சூழல்கள் யாவை? அதன் தூண்டற் பேறுகள் எவை? என்ற அடிப்படைக் கேள்விகள் எம் முன் எழுவது தவிர்க்க  முடியாதுள்ளது.தட்டுத்தடுமாறி தறிகெட்டுத்திளைக்கும் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்துவரும் சமூகப்பெருந்தகைகள் அறிஞர் பெருமக்கள் கல்விமான்கள் அனைவரும் எமது சமூகப்பிறழ்வுகளைச் சுட்டிக்காட்டாது அவர்களைத் திருத்த முயலாது ஒதுங்கிக்கொள்வதை காணமுடிகிறது.ஏன் இந்த நிலமை என்று ஆராய்ந்து பார்த்ததில் கல்வி அறிவுமிக்க மூத்தோர்கூட எமது சமூகத்துக்கு கலாசாரத்திற்கு விரோதமாக ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை அவதானிக்க முடிகிறது.சமூகத்தை திருத்துவதற்கு தாம்முற்படும் போது தம்மீதான குற்றங்கள் அம்பலத்திற்கு வரும் என்ற ஒரு குற்றஉணர்வு அவர்களை ஆட்கொள்ள முனைகிறதா? இவ்வழியில் ஒதுங்கியிருந்தால் யார் எமது சமூகத்துக்கும் இளையதலைமுறைக்கும் வழிகாட்டுவது? போன்ற பல்வேறு அடிப்படைக் கேள்விகள் எம்மனதில் எழுகின்றமை இயல்பானதே.இவற்றுக்கு நாம் விடைதேட முனையவேண்டும்.

பொதுக்கைங்கரியங்களில் ஈடுபடும் சமூகநல அக்கறை வாய்ந்தவர்கள் எம் சமூகத்தை வெறுக்காது கோபதாபங்களுக்கு ஆட்படாது யதார்த்தமாக எமது சமூகப் பிரச்சினைகளை அணுகி எமது சமுதாயத்தை மீட்சிபெற வைக்க வேண்டும்.நாம்கடந்து வந்த பாதையை சற்று ஒருகணம் திரும்பிப்பார்ப்போமேயானால் அக்காலத்தில் வாழ்ந்த எம்மக்களின் வாழ்வியல் முறைகள் இறுக்கமான கலாசார ஒழுக்க விழுமியங்களை எங்கும் எதிலும் கடைப்பிடிக்கும் இயல்பு ,மூத்தோரை மதிக்கும் பண்பு, மாதா பிதா குரு ஆகியோருக்கு மதிப்பளிக்கும் பண்பு, இறைபக்தி ,ஆன்மீகநாட்டம் ஒழுக்கமுறை  ,கல்விமுறை போன்ற பல உன்னதமான பண்பாடுகள் இருந்தன.அன்றையகாலம் யுத்த அரக்கனின் கோரப்பிடிக்குள் எம் இனம் சிக்குண்டிருந்த காலம் சமாதானத்தையும் நிம்மதியையும் அமைதியையும் யாசித்து நின்ற எம்மக்களின் மனதில் வேதனை, விரக்தி, வெறுமை, வெறுப்பு என்பவை மனதில் குடிகொண்டு எதிர்காலம் கருகி நாளை என்ன நடக்குமோ? என்ற இயல்பான ஏக்கம் எம் இனத்தின் நம்பிக்கைக் கீற்றுக்களைத் தடுத்தது.உயிர்ப்பலிகள், படுகொலைகள், அங்க இழப்புக்கள், உறவுகளின் இழப்புக்கள், சொத்திழப்பு ,இடம்பெயர்வு என மக்கள் துன்பசாகரத்தில் மூழ்கியிருந்த காலமது.இந்நிலையில் கூட எம்மவர்கள் கலாசார விழுமியங்களைப் பேணுவதில் அசுர சாதனை படைத்தனர்.இதன் பிண்ணனியை நோக்கினால் அப்போது ஆட்சியிலிருந்தவர்கள் எமது கலாசாரத்தைப் பேணிப்பாதுகாப்பதில் கொண்டிருந்த கண்டிப்பான அக்கறைகளால் தமிழரின் ஒட்டுமொத்த அடையாளமும் கட்டிக்காக்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை.'தட்டிக்கேட்க ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்' என்பது போல தான்தோன்றித்தனமான போக்கு முளைவிடத்தொடங்கி விட்டது.

அன்னிய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பு ,தரமற்ற சினிமாக்களின் தரிசனம் என்பவை எமது வாழ்வியலில் எதிர்மறையான பிரதிபலிப்புக்கள் ஏற்பட நிலைக்களனாக அமைந்தன.இவை தவிர தற்போது போர் ஓய்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் தென்னிலங்கைச் சுற்றுலாப்பயணிகளின் வருகையினாலும் பல்வேறுவகையான கலாசார சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.அதுமட்டுமன்றி தற்போது எம்மவரை ஆக்கிரமித்திருக்கும் செல்லிடத்தொலைபேசிகளின் அசுர வியாபகம் எமது சமூக பொருளாதார பண்பாட்டுத்தளத்தில் காத்திரமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. மிக நவீனத்துவம் வாய்ந்த செல்லிடத்தொலைபேசிகளை முறைதவறிப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளமையால் இவையும் எமது சமுதாயப்பிறழ்வுகளுக்கு காரணமாகின்றன. மது, போதைவஸ்துப் பாவனை அடிதடி என்று கட்டுக்கடங்காத்திரியும் இளைஞர்கள், நாகரீகம் என்ற போர்வையில் அநாகரிகமாக உடையணிந்து பவனிவரும் நவநாகரீக கன்னியரின் விரசமான உடை, சிகை அலங்காரம் போன்ற சமூகத்துக்கு ஒவ்வாத செயல்கள் எமது சமுதாயத்தில் வக்கிரஉணர்வையும் பாலியல்வன்புணர்ச்சி போன்ற சமூக விரோத செயல்களையும் தூண்டி எமது பண்பாட்டில் சிதைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான சமூகபிறழ்வான நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பானது எமது இனத்தின் இருப்பிற்கே வேட்டுவைக்கும் கருவிகளாக மாற்றமடைய சந்தர்ப்பங்களும் உண்டு.

இன்று தமிழினத்தின் கலாசாரம் செத்துக்கொண்டிருக்கிறது.தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கூட கலாசாரத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படுவதில்லை. திருமணவைபவங்கள், ஆலயத்திருவிழாக்கள் ,சமயவிழாக்கள், பண்டிகைகள், போன்ற மங்களகரமான நிகழ்வுகளிலும் மரணச்சடங்கு போன்ற துன்பகரமான நிகழ்விலும் தமிழர்தம் பண்பாட்டை பிரதிபலிப்பதில்லை.அத்துடன் மேற்படி நிகழ்வுகளில் ஊடுருவியுள்ள வீடியோ கலாசாரம் தமிழரின் பண்பாட்டு அம்சங்களுக்கு வேட்டு வைக்க முயல்கின்றது.நிகழ்வுக்காக வீடியோ படப்பிடிப்பு என்ற நிலைமாறி வீடியோ படப்பிடிப்பிற்கான நிகழ்வு என்றமைந்து பல சம்பிரதாயங்களைக் கூட புறக்கணிக்கப்பட்டு வருகின்றதைக் காணக்கூடியதாயுள்ளது. 'புதியன புகுதலும் பழையன கழிதலும் கால வழுவல- கால விதிமுறைக்கே' ஆயினும் தலைமுறை தலைமுறையாகப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த அரிய பல முதுசொம்களை பேணிப்பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். ஒரு இனத்தின் சான்றுகளான மொழி பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படுமேயானால் அவ்வனத்தின் ஸ்திரத்தன்மையை (Stability) உறுதி செய்ய முடியும்.இல்லையேல் அவ்வினம் அழிக்கப்பட்ட இனமாக, ஒடுக்கப்பட்ட இனமாக, இனம் என்ற அடையாளமே இல்லாத ஓர் இனமாக மாறுதல் அடையக்கூடிய அதிகபட்ச சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ளது. இதில் எமது இனமும் விதிவிலக்கல்ல என்பதை ஒவ்வொரு இளைஞர் யுவதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக